Friday, July 6, 2012

உடலில் வாழும் பாக்டீரியா வகையை நிர்ணயிக்கும் மரபணுக்கள்!

உடலில் வாழும் பாக்டீரியா வகையை நிர்ணயிக்கும் மரபணுக்கள்!


நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நம் உடலுக்கு உள்ளேயும், தோலின் மேற்பரப்பிலும் கோடிக்கணக்கில் பாக்டீரியாக்கள் பிள்ளை குட்டிகளுடன், குடியும் குடித்தனமுமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. மேலும், மனித உடலுக்கு உள்ளேயும், மேலேயும் வாழும் குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள், சில நோய்களுடன் தொடர்புடையவையாய் இருக்கின்றன என்கிறது சமீபத்திய ஆய்வு.
ஆனால், `யார் உடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது எது?' என்பது மட்டும் இன்னும் ஒரு மர்மமாகவே தொடர்கிறது.
`இதன் பின்னணியில் ஒரு மரபியல் காரணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் இந்த கூற்று எவ்வளவு ஆழமானது என்பது மட்டும் புரியவில்லை' என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தின் மரபியலாளர் ரான் ப்ளெக்மேன்.
மனித உடலுக்கு உள்ளேயும், மேலேயும் வாழும் நுண்ணுயிரிகளை வகைப்படுத்தி பட்டியலிட, ரான் தலைமையிலான ஆய்வுக்குழு மனித நுண்ணுயிரி பிராஜெக்ட் தகவல்களை ஆய்வு செய்தது.
மனித தோல், வாய், மலம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பாக்டீரியாவின் டி.என்.ஏ. இருக்கிறதா என்று பரிசோதிப்பதே மனித நுண்ணுயிரி பிராஜெக்ட் முயற்சியின் நோக்கம். ஆனால், இத்தகைய பரிசோதனைகளின்போது மேற்குறிப்பிட்ட மாதிரிகளில் சிறிதளவு மனித மரபுப் பொருளும் கலந்து விடுகின்றன.
அதனால், பாக்டீரிய டி.என்.ஏ. தகவல்களில் கலந்திருக்கும் மனித டி.என்.ஏ. தகவல்களை சேகரித்து, அதிலிருந்து சுமார் 100 பேருடைய மரபணு புரொபைல் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு மனித மற்றும் பாக்டீரிய டி.என்.ஏ. தகவல்களை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், 51 வெவ்வேறு மனித மரபணு மாற்றங்களுக்கும், உடலுக்கு உள்ளேயும் மேலேயும் உள்ள சுமார் 15 உடல் பகுதிகளில் வாழும் சில வகை பாக்டீரியாக்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
முக்கியமாக, இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்ட சில மனித மரபணுக்களும் அவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய பாக்டீரியாக்களும் சில நோய்களுடன் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.
உதாரணமாக, சர்க்கரை நோய்க்கு காரணமான இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் றிசிஷிரி 2 மரபணுவுக்கு அருகில் மரபணு மாற்றங்களை உடையவர்களின் குடலில், `பாக்டீரியாய்ட்ஸ்' எனப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தன.
சுவாரசியமாக, இந்த மரபணு மாற்றம் டைப் 2 சர்க்கரை நோயுடன் சம்பந்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. அதுபோலவே அதிகமான பாக்டீரியாய்ட்ஸ் பாக்டீரியாக்களும் டைப் 2 சர்க்கரை நோயுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காயங்கள் சம்பந்தமான நோய்களுடன் தொடர்புடைய சிஙீசிலி 12 மரபணு மாற்றங்களை உடையவர்களின் தோலில் `க்ரானுலிகாட்டெல்லா' எனப்படும் ஒரு வகை பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இந்த பாக்டீரியாக்கள் தோல் காயங்களுடன் சம்பந்தப்பட்டவை என்பது இதற்கு முன்பே தெரிந்த செய்தியாகும்.
இது `கோழிக்கு பிறகு முட்டையா? இல்லை முட்டைக்கு பிறகு கோழியா?' போன்ற பிரச்சினையாகும் என்கிறார் ஆய்வாளர் ரான் ப்ளெக்மேன். அதாவது, `ஒரு சில வகையான மரபணு மாற்றங்கள் உள்ளவர்களின் உடலில் குறிப்பிட்ட வகையான பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட நோய்களை ஏற்படுத்துகின்றனவா அல்லது குறிப்பிட்ட சில மரபணு மாற்றங்களால் நோய்கள் ஏற்பட்டு அதனால் சில வகையான பாக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் வளருகின்றனவா?' என்பது இன்னும் புரியவில்லையாம்.
`எது எப்படியோ, குறிப்பிட்ட சில நோய்களால் ஏற்படும் ஆபத்தினை நிர்ணயிக்க குறிப்பிட்ட பாக்டீரியா கலவைகளை மருத்துவர்கள் அடையாளம் காட்டிகளாக பயன்படுத்தலாம்' என்கிறார் பெஞ்சமின் வாய்ட். இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மரபியலாளர் ஆவார்.
ஆனால் அதற்கு முன்பு மரபணுக்கள், நோய்கள் மற்றும் நுண்ணுயிரிகள் இவை மூன்றும் தொடர்புடையவை என்பதை புள்ளி விவரத்துடன் ஆய்வாளர்கள் நிரூபிக்க வேண்டியது அவசியம் என்கிறார் மரபியலாளர் பெஞ்சமின். நம் உடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் வாழ வேண்டும் என்பதை நாமும் ஒரு வகையில் நிர்ணயிக்கிறோம் என்னும் புதிய அறிவியல் உண்மையை ஆதாரங்களுடன் முன்வைக்கிறது இந்த ஆய்வு. ஆக, நம் உடலில் வாழும் பாக்டீரியாக்கள் ஒரு வகையில் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
முனைவர் பத்மஹரி

No comments: