Tuesday, July 17, 2012

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி!

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி!

உலகில் இன்று வெப்பப் பிரதேசங்களாக உள்ள சில பகுதிகள் பழங்காலத்தில் குளிர்ப் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதுமே ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமாகவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்கின்றனர்.
பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
பூமியின் மீது படர்ந்து படிந்து கிடக்கும் பனிப் போர்வையின் இடமாற்றமே அந்தந்தப் பிரதேசத்தின் தட்பவெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து.
பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.
ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக்கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங்காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இம்மலை மீதுள்ள பனிக்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஓரிடத்தில் இருக்கும் பிரம்மாண்டமான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப்படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.
பனிப் படலங்கள் இடம்பெயரும்போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடாவிலும், அமெரிக்காவிலும் உள்ளன. பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் என்றே கருதப்படுகின்றன.
பனிப் போர்வையின் வருகையும், விலகலும் தட்பவெப்பநிலையை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங்களையும் மாற்றி அமைக்கின்றன.
உதாரணமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பனிப் பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உயர்ந்துவிடும்.
அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும். அதே சமயத்தில் கிரீன்லாந்து, சைபீரியா, அலாஸ்கா, கனடா போன்ற பகுதிகளில் கடலை ஒட்டிய புதிய நிலப்பரப்புகள் தோன்றத் தொடங்கும்.
பூமியில் சிலசமயம் வெப்பம் கூடுதலாகவும், சில சமயம் குறைவாகவும் இருப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றை அண்மைக் காலத்தில் கண்டிருக்கிறார்கள்.
இந்தக் காரணத்தை கரியமில வாயுவின் `பசுமைக் கூட விளைவு' என்கிறார்கள்.
கரியமில வாயுவானது அகச்சிவப்பு கதிரியக்கத்தை அதிக அளவில் உட்கொள்கிறது. வானக் காற்றில் இந்த அகச்சிவப்பு கதிரியக்கம் அதிக அளவில் இருந்தால் அது இரவில் சூரிய உஷ்ணத்தில் வெப்பமடைந்து பூமியில் இருந்து வெப்பம் வெளியேறி ஓடுவதைத் தடுக் கிறது. அதன் காரணமாக வெப்பம் சேமித்து வைக்கப் படுகிறது. இதன் காரணமாக பூமியில் வெப்பச் சூழல் நிலவும். இதற்கு மாறாக வானக் காற்றில் கரியமில வாயு குறைந்தால் பூமி சிறுகச் சிறுகக் குளிர்ச்சியடையும்.
`பசுமைக்கூட விளைவை' தடுக்கும் விதமாகத்தான் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

No comments: