Tuesday, July 3, 2012

தேசிய வேளாண் காப்பீடு திட்டம்

தேசிய வேளாண் காப்பீடு திட்டம்

இயற்கை இடர்பாடுகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடும் திட்டமான தேசிய வேளாண் காப்பீடு திட்டம் பற்றிய விவரங்கள் இதோ:

இத்திட்டத்தின் கீழ் அனைத்து விதமான உணவு பயிர்கள் அதாவது தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் வருடாந்திர வணிக தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்படும்.
அனைத்து விதமான இயற்கை சீற்றங்களால் அதாவது வெள்ளம், வறட்சி, பூச்சி நோய்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டம் காப்பீடு வழங்குகிறது.
குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும், பாங்க் கடன் பெறுவோர் மற்றும் கடன் பெறாதோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
நெல் பிசான பருவ பயிருக்கு காப்பீடு தொகை 13 ஆயிரத்து 24 ரூபாய் ஆகும். இதற்கு காப்பீடு கட்டண தொகையாக சிறு, குறு விவசாயிகள் ஏக்கருக்கு 117 ரூபாயும், இதர விவசாயிகள் ஏக்கருக்கு 130 ரூபாயும் செலுத்த வேண்டும்.
தானியம், பயறு, எண்ணெய்வித்து, பருத்தி பயிர்களுக்கு காப்பீடு கட்டணத்தில் 75 சதவீதம் மானியம் மத்திய, மாநில அரசால் வழங்கப்படுகிறது.

தென்னை மரங்களை காப்பீடு செய்வது எப்படி?

தென்னந்தோப்புகளுக்கும் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சிநோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகின்ற தென்னை மரங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.
இக்காப்பீடு வசதியை பெறுவதற்கு குறைந்த பட்சம் பலன் தரக்கூடிய 10 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
ஒரு விவசாயி காப்பீடு பெற பண்ணையில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் காப்பீடு செய்திருக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு சுமார் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய தகுதியாகும்.
நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை உள்ள தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு காப்பீடு கட்டணம் 1.17 ரூபாய் ஆகும்.
இதற்கு காப்பீடு தொகையாக 600 ரூபாய் வரை கிடைக்கும். 16 முதல் 60 ஆண்டுகள் வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு 1.58 ரூபாய் செலுத்திட காப்பீடு தொகையாக மரம் ஒன்றுக்கு ஆயிரத்து 150 ரூபாய் பெறலாம்.

இவை தவிர வானிலை அடிப்படையிலான காப்பீடு திட்டமும் உள்ளது. மழை, வெப்பம், ஈரப்பதம் ஆகிய வானிலை காரணங்களால் ஏற்படும் மாற்றங்களால் பயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்யும் பொருட்டு விவசாயிகளுக்கு வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம் ரபி பருவத்தில் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பயிர் மகசூல ழப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம், வானிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்பினை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

வட்டாரம் தோறும் அறிவிக்கப்பட்ட குறு வட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பிரிமிய தொகையினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி பயன் பெற்றிட வேண்டும்.

இப்பயிர் காப்பீடு சம்பந்தமான சிறப்பு விழிப்புணர்வு முகாம் வரும் 19ம் தேதி செங்கோட்டை தாட்கோநகரில் நடக்கிறது. மேலும பல விபரங்கள் பெற முகாமில் பங்கேற்கும்படி விவசாயிகளை கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பெறப்பட்ட செய்தி தப்போது தொகையும் கட்டுபாடுகளும் மாறி இருக்கலாம் . சொந்தங்களுக்கு எதாவது தெரிந்தால் அப்டேட் செயலாம் .

No comments: