Tuesday, July 17, 2012

பேசும் செடிகள்!

பேசும் செடிகள்!


செடிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவை அவ்வாறு ஆடுவதன் மூலம் ஒன்றுக்கொன்று பேசுகின்றன என்ற அதிசயத் தகவலைக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள். தாவரங்கள் ஒலிக்கு `ரெஸ்பான்ஸ்' காட்டுவது மட்டுமல்ல, தாங்களே சில ஒலிகளை வெளியிடவும் செய்கின்றன என்கிறார்கள் இவர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அதிசக்தி வாய்ந்த ஸ்பீக்கர் களை பயன்படுத்தினர். அதன்மூலம் சோளப் பயிர்கள் தமது வேர்ப் பகுதியிலிருநëது வெளியிட்ட `கிளிக்' ஓசையைக் கேட்டனர்.
காற்றில் செடிகள் தமது விருப்பம் ஏதுமில்லாமல் இயல்பாக ஆடுவது போலத் தோன்றினாலும், உண்மையில் அவை அப்போது தொடர்ந்து `உரையாடி'க் கொண்டு இருக்கின்றனவாம்.
தாவரங்கள் ஏற்படுத்தும் அதே அலைவரிசையிலான ஒலியைத் தொடந்து ஏற்படுத்தியபோது, தாவரங்கள் அதை நோக்கி வளரத் தொடங்கியிருக்கின்றன. தாவரங்கள் பொதுவாக வெளிச்சம் நோக்கி வளரும் என்று நமக்குத் தெரியும். ஒலியும் அவற்றை ஈர்க்கிறது என்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
எக்ஸெட்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிடும் தகவல் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது, முட்டைக்கோஸ் தாவரமானது ஒருவித வாயுவை வெளியிட்டு, வெட்டுக்கிளிகள், செடிகளை வெட்டும் கத்திரிகள் குறித்து பிற தாவரங்களை எச்சரிக்கின்றனவாம்.
மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காத ஒலி மொழியில் செடிகள் பேசிக்கொள்கின்றன என்பதற்கு இவ்வாறு உறுதியான ஆதாரம் கிட்டியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மொழி என்பது மனிதர்களின் கண்டுபிடிப்பு என்று இனியும் நாம் பெருமையடித்துக் கொள்ள முடியாது!

No comments: